கோலாலம்பூர்: மலேசியாவின் 17வது மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் அரியணை ஏறியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் மாமன்னராக ஆட்சி புரிவார்.
ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவுபெற்றதை அடுத்து, பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா சொந்த மாநிலம் திரும்பியுள்ளார்.
அவருக்குப் பதிலாக 65 வயது ஜோகூர் சுல்தான் இப்ராகிம் மாமன்னராகியுள்ளார்.
ஜோகூர் மன்னர் மாமன்னராக முடிசூடப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.
1984ஆம் ஆண்டுக்கும் 1989ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மாமன்னர் இப்ராகிமின் தந்தையான காலஞ்சென்ற சுல்தான் மஹ்முட் இஸ்கந்தர் மாமன்னராக இருந்தார்.
மாமன்னரின் முடிசூட்டு விழா ஜனவரி 31ஆம் தேதி காலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்றது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பேராக் மாநில ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் முய்ஸுதீன் ஷா துணை மாமன்னராகச் செயல்படுவார்.
முடிசூட்டு விழாவில் மாநில மன்னர்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர்கள் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோப், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மலேசியாவில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் புதிய மாமன்னர் மூடிசூடப்படுவார்.
மலேசியாவின் ஒன்பது மாநில மன்னர்கள் சுழல்முறையில் மாமன்னராக அரியணை ஏறுவர்.
எதையும் பூசி முழுகாமல் உள்ளதை உள்ளபடி கூறும் குணமுடையவர் மாமன்னர் இப்ராகிம்.
மலேசிய அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் அடிக்கடி, வெளிப்படையாகக் கருத்துரைப்பது வழக்கம்.