ஹேம்பர்க்: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதிப் போராளிகள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துகின்றனர்.
செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிநிலை இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை என்று ஜெர்மனியின் ஹாபக்-லோய்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோல்ஃப் ஹேபன் ஜென்சன் ஜனவரி 31ஆம் தேதியன்று ஹேம்பர்க் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
செங்கடல் நெருக்கடிநிலை எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்க அரசியல் ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நெருக்கடிநிலையை ஆறு மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரும் சாத்தியம் இருப்பதாக திரு ஹேபன் தெரிவித்தார்.
ஹாபக்-லோய்ட் உலகிலேயே ஐந்தாவது ஆகப் பெரிய சரக்குக் கப்பல் நிறுவனம்.
செங்கடல் நெருக்கடிநிலை காரணமாக மற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல்களைப் போலவே அதன் சரக்குக் கப்பல்களும் வேறு பயணப் பாதையைப் பயன்படுத்துகின்றன. சரக்குக் கப்பல்கள் சுவேஸ் கால்வாய் வழியாகச் செல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயண நேரம் கூடுவதுடன் செலவினமும் அதிகரித்துள்ளது.