வாஷிங்டன்: அமெரிக்கா, பிப்ரவரி 2ஆம் தேதி, ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் புரட்சிகர ராணுவப் படையினர்க்கும் அவர்களின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நால்வர் கூறினர்.
சென்ற வார இறுதியில் ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டது. ஜோர்தானியத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் கொல்லப்பட்டதுடன் ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் நடத்தவிருக்கும் பல்வேறு நிலைகளிலான பதிலடிகளின் தொடக்கமாக அண்மைத் தாக்குதல் கருதப்படுகிறது.
தளபத்திய, கட்டுப்பாட்டு நிலையங்கள், உந்துகணைகள், ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திக் கிடங்குகள், தளவாட மையங்கள், வெடிமருந்து விநியோகிப்பு மையங்கள் போன்றவை தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
85க்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.
முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி சிரியாவின் பாலைவனப் பகுதிகளிலும் சிரியா-ஈராக் எல்லையிலும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
டோவர் ஆகாயப்படைத் தளத்தைச் சென்றடைந்த, ஜோர்தானியத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் நல்லுடல்களை அதிபர் பைடனும் தற்காப்புத் துறைத் தலைவர்களும் பார்வையிட்ட சில மணி நேரத்தில் சிரியா அரசாங்க ஊடகத் தகவல் வெளியானது.
ஜோர்தானியத் தாக்குதல், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபரில் போர் தொடங்கியதன் பிறகு அமெரிக்கத் துருப்பினர் உயிரிழந்த முதல் சம்பவமாகும். அதில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
இதற்கிடையே, சிரியா, ஈராக் நாடுகளிலுள்ள 85 இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 30 மேற்பட்டோர் மாண்டனர் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.