இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரின் மனைவி புஷ்ரா பீபிக்கும் 2018ஆம் ஆண்டில் நடந்த திருமணம், சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆளுக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
இவ்வாறு இம்ரான் கானுக்கு இவ்வாரம் மூன்றாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள 71 வயது இம்ரான் கானுக்கு அரசாங்க ரகசியத்தைக் கசியவிட்டதற்காக ஜனவரி 30ஆம் தேதியன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, இம்ரான் கானுக்கும் அவரின் மனைவிக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நாட்டுக்குச் சொந்தமான பரிசுப்பொருள்களை அவர்கள் விற்றதற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, புஷ்ரா பீபியின் முதல் கணவர் கவார் மனேகா வழக்கு தொடர்ந்திருந்தார்.
மறுமணத்திற்கான கட்டாயக் காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை அவர்கள் மீறியதாக அவர் கூறியிருந்தார்.
அதையடுத்து, அடியாலா சிறையில் 14 மணி நேரம் நீடித்த இறுதிக்கட்ட விசாரணைக்குப்பின், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.