வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை, யுஎஸ்$118 பில்லியன் (S$159 பில்லியன்) மதிப்பிலான மசோதாவை பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு, உக்ரேனுக்கும் இஸ்ரேலுக்குமான நிதியுதவி ஆகியவை தொடர்பான மசோதா அது.
இருப்பினும், திரு டோனல்ட் டிரம்ப்பும் குடியரசுக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த மசோதா நிறைவேறுமா என்று உறுதியாகக் கூற இயலவில்லை.
அமெரிக்க செனட் சபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவரான சுக் ஷூமர், மசோதா மீதான முதற்கட்ட வாக்கெடுப்பு பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இருதரப்பிலுமே இதற்கு எதிர்ப்பு எழக்கூடும் என்று கருதப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பிற்கு 20.23 பில்லியன் அமெரிக்க டாலரும் உக்ரேனுக்கு நிதியுதவி அளிக்க 60.06 பில்லியன் அமெரிக்க டாலரும் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு உதவிக்காக 14.1 பில்லியன் அமெரிக்க டாலரும் செங்கடல் பிரச்சினை, அமெரிக்க மத்திய தளபத்தியத்திற்கு 2.44 பில்லியன் அமெரிக்க டாலரும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் உள்ள பங்காளித்துவ நாடுகளுக்கு உதவ 4.83 பில்லியன் அமெரிக்க டாலரும் நிதி ஒதுக்க அந்த மசோதா வகைசெய்யும்.
கூடுதலாக, காஸா, மேற்குக் கரை, உக்ரேனில் உள்ள பொதுமக்களுக்கு மனிதநேய உதவி வழங்க 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.