பாகிஸ்தானில் இழப்பில் இயங்கும் அந்நாட்டு தேசிய விமான நிறுவனமான ‘பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸை’ தனியார்மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்தது.
அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழான ‘டான்’ திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.
அண்மையில் அந்நாட்டு தேர்தல் குழு அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடமைகளையும் வரம்புகளையும் நினைவூட்டியதாக அந்நாளிதழ் கூறியது.
மேலும், தனியார்மயமாக்கல் திட்டத்திற்கான ஆவணங்கள் அனைத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கும்படி அக்கடிதத்தில் அது கோரியதாகவும் அந்நாளிதழ் குறிப்பிட்டது.
பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அல்லது அதற்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் திட்டத்தில் தொடர்புடைய எந்தவொரு ஆவணங்களிலும் கரசாங்கம் கையெழுத்திட கூடாது என்றும் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கத்திடம் அக்குழு எடுத்துரைத்ததாக அந்நாளிதழ் தெரிவித்தது.