சான்டியாகோ: சிலியில் காட்டுத் தீ காரணமாக இதுவரை 123 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல குடியிருப்புப் பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டதாகவும் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் பெருஞ்சேதம் ஏற்படக்கூடும் என்றும் சிலி அதிபர் கேப்ரியல் பொரிச் அச்சம் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் பணிகளில் ராணுவ வீரர்களும் உதவுகின்றனர்.
காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வினா டெல் மார், குயில்புயே ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே ஏறத்தாழ 14,000 வீடுகள் அழிந்துவிட்டதாக சிலியின் உள்துறை அமைச்சர் மனுவல் மொன்சால்வே கூறினார்.
நாடெங்கும் 165 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டில் சிலியில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து, இதுவே அந்நாடு எதிர்கொள்ளும் ஆக மோசமான பேரிடர் என்று கூறப்படுகிறது.