இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
ஏற்கெனவே, பல பிரச்சினைகளுக்கு இடையே இத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் நாளன்று வன்முறை வெடித்தது. இதில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர்.
டேரா இஸ்மாயில் கான் மாநிலத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மாண்டனர்.
மற்றோர் இடத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கிக்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலுச்சிஸ்தான் மாநிலத்தில் பல கையெறிக் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வாக்களிப்பு தங்குதடையின்றி நடைபெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வட வசிரிஸ்தானில் உள்ள சில வாக்குச் சாவடிகளுக்குள் பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் புகுந்து அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அந்த மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளரான திரு மொசின் தவார் கூறினார்.
ஆனால் இதை பாகிஸ்தான் தேர்தல் ஆணையமோ அல்லது பாதுகாப்புப் படைகளோ உறுதி செய்யவில்லை.
பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியபோதிலும் பாகிஸ்தானில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் எங்கும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டன.
தேர்தல் நாளுக்கு முன்பாக அண்மைய காலமாக பாகிஸ்தானில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உதாரணத்துக்கு, பிப்ரவரி 7ஆம் தேதியன்று பலுச்சிஸ்தான் மாநிலத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.
இதில் 26 பேர் மாண்டனர். தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
பாகிஸ்தானில் தற்போது மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடிநிலை நிலவுகிறது.
அத்துடன், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனும் பகை உணர்வுடனும் முட்டி மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் முன்னுரைத்துள்ளனர்.
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வாக்களிப்பின்போது பாகிஸ்தான் முழுவதிலும் கைப்பேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
கைப்பேசி சேவையை உடனடியாக வழக்கநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் திரு பிலாவால் புட்டோ ஸர்தாரி குரல் எழுப்பியுள்ளார்.
இதற்காக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றங்களையும் தமது கட்சியினர் அணுகியிருப்பதாக அவர் கூறினார்.
கைப்பேசி சேவை முடக்கப்பட்டது குறித்து வாக்காளர்கள் சிலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறைகூறினர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சொந்த ஒய்ஃபை கணக்குகளின் மறைச்சொற்களை நீக்கி மற்றவர்களும் அதைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரிக் இன்சாஃப் கட்சி அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது.
ஆனால் அண்மையில் பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைப்பேசி சேவை முடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 9ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.