ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவுக்கு அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் வருகை அளிப்பதுடன் அங்கு பொருள்களும் வாங்குவதால் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகத் தரவுகள் ஏதுமில்லை என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமா கூறியுள்ளார்.
“அமைச்சு தொடர்ந்து சோதனைகள் நடத்திவருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விநியோகமும் விற்பனை விலையும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களுக்கு உட்பட்டுதான் இன்னமும் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளோம்,” என்றார் அவர்.
இருப்பினும், லாபம் ஈட்டுதல், விநியோகப் பிரச்சினைகள் தொடர்பான சம்பவங்கள் குறித்து கேபிடிஎன்னிடம் புகார் அளிக்குமாறு அவர் பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
கிடைக்கும் ஒவ்வொரு புகார் தொடர்பிலும் அமலாக்க அதிகாரிகள் சோதனைகள் இடுவதாக அவர் உறுதியளித்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது விநியோகம் போதுமானதாக உள்ளது என்று கண்டறியப்பட்டாலும் சில்லறை வர்த்தகங்களை அடைவதற்கு நாள்கள் ஆகலாம் என்றார்.
இதற்கிடையே, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகே ஊழியர்களை நிறுத்துமாறு பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை திருவாட்டி லிலிஸ் சஸ்லிண்டா கேட்டுக்கொண்டார். வெளிநாட்டில் பதிவான வாகனங்களுக்கு ‘ரோன்97’ ரக பெட்ரோலை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் சலுகை விலை ‘ரோன்95’ பெட்ரோலை நிரப்பக்கூடாது என்றும் அந்த ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
“வெளிநாட்டில் பதிவான வாகனங்களை ஓட்டும் சிலர், தங்களின் பற்றட்டை அல்லது கடன் அட்டையைக் கொண்டு பெட்ரோலுக்குக் கட்டணம் செலுத்திவிடுகிறார்கள். அத்துடன் யார் கண்ணிலும் படாதபடி ஆகத் தொலைவில் உள்ள பெட்ரோல் சாவடிக்குச் சென்று ரோன்95 எண்ணெய் நிரப்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்,” என்றார் திருவாட்டி லிலிஸ் சஸ்லிண்டா.
இந்த விவகாரம் குறித்து கவனக்குறைவாக உள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரித்தார் அவர்.