இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணியது.
பாகிஸ்தானில் வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு பிறகு தான் வாக்குகள் எண்ணப்பட்டன.
பாகிஸ்தான் நேரப்படி அதிகாலை 4.30 மணி முதல் ஒவ்வொரு தொகுதியாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடர்புடைய வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிடிஐ எனப்படும் இம்ரான் கானின் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அதனால் அக்கட்சி சார்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
266 தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு பெற்ற 150 வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும் மாலை வரை 67 தொகுதிகளில் மட்டுமே வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.
தேர்தல் நடந்த தினத்திலும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு மற்றும் கலவரம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் கைப்பேசி சேவைகள் முடக்கப்பட்டன. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பின.
பாதுகாப்பு காரணங்களுக்காக தான் இணைய சேவை முடக்கப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு விளக்கம் கூறியது. கலவரம் குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனமும் கவலைத் தெரிவித்தது.
வாக்கு எண்ணும் நிலையங்கள் முக்கியமான நகரங்கள் மற்றும் சாலைகள் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பாதுகாவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணம் கருதி ஈரான், ஆப்கானிஸ்தானுடன் கொண்ட எல்லையையும் தற்காலிகமாக மூடப்பட்டது.