ஜோகூர் பாரு: ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி நிர்வாகப் பொறுப்பு ஏற்று ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோகூர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவிருக்கிறது.
இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
“அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றப்படுகின்றன. குறைந்த அளவிலேயே மாற்றம் இருக்கும். ஜோகூர் மாநில அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்த மாற்றம் இடம்பெறுகிறது,” என்று ஜோகூர் முதல்வர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் அம்னோ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு திரு ஓன் ஹஃபிஸ் காஸி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சென்ற புதன்கிழமை ( 7 பிப்ரவரி) சுற்றுலாத் துறையை தாம் எடுத்துக் கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார்.
இது, அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியிருந்தது.
அன்றைய தினம், தனது வீட்டில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு ஒன்றுகூடலின்போது சீனத் தலைவர்களிடம் பேசிய அவர், சுற்றுலாத் துறைக்கு தாம் பொறுப்பு ஏற்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
“எங்களுடைய பொறுப்புகளில் சிறிய மாற்றங்களை செய்திருக்கிறோம். அதன் பிறகு சுற்றுலாத் துறையை நான் கவனித்துக் கொள்வேன்,” என்று முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறியிருந்தார்.