தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நாடு தழுவிய போராட்டத்துக்கு இம்ரான்கான் கட்சியினர் அழைப்பு

பாகிஸ்தானில் ஆட்சியமைப்பதில் இழுபறி, 52 சாவடிகளில் மறு வாக்குப் பதிவு

2 mins read
db3f9df5-1597-4fdc-bfb1-7a1d036b5b4a
கராச்சியில் உள்ள பாகிஸ்தானின் மாகாண தேர்தல் ஆணையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

தீவிரவாத வன்முறை, அரசியல் கொந்தளிப்பு, வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளுக்கிடையே பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷரீஃப், இம்ரான் கான் இருவரும் வெற்றியை அறிவித்தனர்.

அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பொருளியலை நிலைநிறுத்துவது உட்பட பல சவால்களை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் நிச்சயமற்றநிலையை இது இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 264 இடங்களில் 97 இடங்களை பெற்றுள்ளனர்.

நவாஸ் ஷரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 76 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும், 37 இடங்களில் சிறிய கட்சிகளும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கம் தெரிவித்தது.

இந்நிலையில், மோசடிப் புகார்களைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பிப்ரவரி 15ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க நவாஸ் ஷரீஃபின் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க நவாஸ் ஷரீஃபின் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

இதற்கிடையே, கூட்டணி அரசாங்கத்தை அமைக்க நவாஸ் ஷரீஃபுக்கு ராணுவத்தலைமை தளபதி ஆசிம் முனீா் அழைப்பு விடுத்துள்ளார்.

நவாஸ் ஷரீஃப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகிறது. நவாஸ் ஷரீஃப் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான்கானின் பிடிஐ கட்சியினர், நவாஸ் ஷரீஃப், அவரது மகள் மரியம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல்வாதிகளின் வெற்றிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் உள்ளன. அதில் 266 இடங்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும். 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் குறைந்தது 5% வாக்குகளைப் பெறும் கட்சிகள் பிரதிநிதித்துவ முறையில் இந்த 70 எம்பிக்களை நியமிப்பார்கள். பதிவு செய்யப்பட்ட கட்சிகளே இந்த இடங்களை நியமிக்க முடியும். இம்ரான் கான் கட்சியினர் சுயேட்சையாக நின்றதால் அவர்களால் இந்த எம்பிக்களை நிரப்ப முடியாது.

குறிப்புச் சொற்கள்