லாஸ் வேகஸ்: அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி தனக்குத் தீர்ப்பளிக்கவிருக்கும் வேளையில் அவரை நோக்கித் தாவிக் குதித்த ஆடவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அச்சம்பவம் சென்ற மாதம் மூன்றாம் தேதியன்று கிளார்க் கெளன்டி மாவட்ட நீதிமன்றத்தில் நிகழ்ந்தது. பிறரைத் தாக்க முயன்றதற்காக தனக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று நீதிபதி மேரி கே ஹோல்தஸ் தெளிவாகக் கூறியபோது 30 வயது டியோப்ரா ரெடன் அவர் மீது தாவிக் குதித்தார்.
சிசிடிவி கேமராவில் பதிவான அச்சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்துக்குப் பிறகு பிறரைத் தாக்க முயன்றதற்காக ரெடனுக்கு அதிகபட்சம் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அக்குற்றச்சாட்டை ரெடன் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் நிகழ்ந்த சம்பவத்தையொட்டி அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டை சுமத்தலாம் என்று நடுவர்கள் குழு ஒன்று வியாழக்கிழமை (9 பிப்ரவரி) முடிவெடுத்தது.