இஸ்லாமாபாத்: சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் கடந்த சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தனது ஆதரவாளர்களுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் அவரது குரலில் பலமுறை தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் முறியடிப்பு நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்க திரு கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயன்படுத்தும் உத்திகளில் இது ஒன்று.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பிடிஐ கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட வேட்பாளர்கள் எதிர்பாராவிதமாக பெரும்பாலான வாக்குகளை வென்றனர் என்று சனிக்கிழமை (10 பிப்ரவரி) அறிவிக்கப்பட்டது. அந்த வெற்றியை அறிவித்தது, செயற்கை நுண்ணறிவால் உருவான கானின் குரல்.
கானை எதிர்த்துப் போட்டியிட்ட நவாஸ் ஷரிஃப், தேர்தலில் தாம் வெற்றிபெற்றதாகக் கூறினார். கானின் செயற்கை நுண்ணறிவுக் குரலில் உருவான உரை அதை நிராகரித்தது.
அடக்குமுறைக்கு ஆளாகாமல் இருக்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கு இந்த விவகாரம் ஓர் எடுத்துக்காட்டு எனக் கருதப்படுகிறது. அதேவேளை, செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய அபாயங்கள் தொடர்பான அச்சங்களும் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர் .
“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நல்லது நடந்துள்ளது. இதற்கு நாம் ஆதரவுகூட தெரிவிக்கலாம். பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவரால் தனது ஆதரவாளர்களுடன் பேச முடிகிறது,” என்றார் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ‘ஃபேக்கிங் இட்: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் இன் எ ஹியூமன் வோர்ல்ட்’ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புத்தகத்தின் எழுத்தாளருமான டோபி வால்ஷ் சொன்னார். “அதேவேளை, நாம் பார்ப்பது, கேட்பது ஆகியவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடுவது இது முதன்முறையல்ல. தென்கொரியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவு உத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றன.
“அரசியல் பிரசாரத்தில் செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக ‘டீப்ஃபேக்’ முறை சேர்க்கப்படுவது அவ்வப்போது காணப்படும் நிகழ்வல்ல, அது காலம் செல்லச் செல்ல உருமாறும் போக்காகும்,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தொடர்பு, தகவல் பள்ளியின் துணைப் பேராசிரியர் டாக்டர் சைஃபுதீன் அகம்மது.