லண்டன்: பிரான்சுக்குப் பள்ளி சுற்றுலா சென்ற சிறுவர்கள், மீண்டும் இங்கிலாந்திலுள்ள தங்களின் பள்ளிக்குத் திரும்பியபோது, அவர்களின் பேருந்தில் இரு அழையா விருந்தாளிகள் பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சவுத்தாம்ப்டனில் உள்ள பள்ளியை அடைந்தபோது பயணப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் பேருந்துப் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் அங்கே மறைந்திருந்தனர்.
மூன்று நாள் பயணம் மேற்கொண்ட சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அவ்விடத்தில் இருந்த அனைவரும் உறைந்து போயினர்.
பிள்ளைகளின் உடைமைகள் கசங்கியிருந்ததாகச் சிலர் கூறினர். தன் பிள்ளையின் பை முழுவதும் சிறுநீர் இருந்ததென ஒருவர் கூறினார்.
இந்நிலையில், காவல்துறையினர் அழைக்கப்பட்டபோதும் ஆடவர்கள் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இருவரும் ‘கள்ளக் குடியேறிகளாக இருக்கலாம்’ என்ற சந்தேகம் உள்ளதாகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பள்ளிப் பேருந்தில் 36 பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாகப் பெற்றோர் பலர் சமூக ஊடகங்களில் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.