பெட்டாலிங் ஜெயா: செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் நசுங்கி மாண்ட துயரச் சம்பவம், மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பாலிங் பகுதியில் நடந்துள்ளது.
பிப்ரவரி 12ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சிறுவன் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.
வீட்டின் சமையலறைப் பகுதியைப் பெரிதாக்குவதற்காகச் சிறுவனின் தந்தை புதிதாகச் சுவர் ஒன்றை எழுப்பி இருந்தார்.
அதனால், கட்டுமானப் பணிகள் நடக்கும் அவ்விடத்தில் விளையாட வேண்டாம் என்று சிறுவனுக்கு அவரின் தாயார் முன்னரே எச்சரித்திருந்தார்.
சிறுவனின் தந்தை தொழிற்சாலையில் இருந்தபோது, சிறுவனின் தாயார் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பயங்கர சத்தம் கேட்டு சிறுவனின் தாயார் பார்த்தபோது இடிந்த சுவருக்குக் கீழ் சிறுவனின் உடல் சிக்கி இருந்ததைக் கண்டார்.
சிறுவனின் இளைய சகோதரரும் அதே செங்கல் சுவரால் காயமடைந்தார்.
இதையடுத்து, இரு சிறுவர்களும் மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே சிறுவனின் மரணம் உறுதிசெய்யப்பட்டது.