காப்பார்: சிங்கப்பூரின் ஏவியேஷன் சேஃப்ட்டி டெக்னாலஜி நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பிப்ரவரி 13ஆம் தேதியன்று மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் நகரில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் விமானியான 30 வயது டேனியல் யீயும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 42 வயது ரோஷன் சிங் ரைனாவும் மாண்டதாக த ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
மாண்ட இருவரும் மலேசியர்கள்.
இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அது வினோதமான முறையில் பறந்துகொண்டிருந்ததாக சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திரு ஜினாய்டி நஸிரான் தெரிவித்தார்.
அப்போது தமது காரின் டயரை மாற்றிக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
அந்த விமானம் கட்டுப்பாட்டு இழந்து பிற்பகல் 1.30 மணி அளவில் கம்போங் தொக் மூடாவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்தார்.
“அந்த விமானம் பறந்த விதம் மிகவும் விசித்திரமாக இருந்தது. திடீரென்று அது கீழ்நோக்கிப் பறந்து, விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு விரைந்தேன். அது துண்டுத் துண்டாக சிதறிக் கிடந்ததைப் பார்த்தேன். விமானம் நிலத்துக்கு அடியில் சற்று புதையுண்டது. விமானத்தில் இருந்தவர்களைத் தேடினேன். ஆனால் யாரையும் பார்க்க முடியவில்லை,” என்று 55 வயது திரு ஜினாய்டி கூறினார்.