டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரில் உள்ள மருத்துவமனைக் கட்டடம் மீது வாகனம் ஒன்று மோதியதில் குறைந்தது ஒருவர் மாண்டதாகவும் ஐவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
அமெரிக்க நேரப்படி மாலை 5.38 மணி அளவில் செயின்ட் டேவிட்ஸ் நார்த் ஆஸ்டின் மருத்துவ நிலையக் கட்டடத்தின் மீது வாகனம் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு சிறுவர்களும் பெரியவர் ஒருவரும் டெல் சிறார் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
அந்த இரண்டு சிறுவர்களில் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இன்னொரு பெரியவர் செயின்ட் டேவிட்ஸ் ரவுண்ட் ராக் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவமனைக் கட்டடம் மீது மோதிய வாகனத்தின் ஓட்டுநர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

