பாரிஸ்: அரியவகை மூளைக்கட்டிக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த முதல் சிறுவன் என்ற சிறப்பு பெல்ஜியத்தைச் சேர்ந்த லூகாசைச் சாரும்.
தற்போது 13 வயதாகும் அவனுக்கு ஆறு வயதில் மூளையில் புற்றுநோய்க் கட்டி கண்டறியப்பட்டது.
மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ‘பிரெய்ன்ஸ்டெம் க்ளையோமா’ எனும் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து இப்போது அவன் முற்றிலும் விடுபட்டிருப்பதாக அவனுக்கு சிகிச்சை அளித்த ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் ஓர் ஆண்டில் ஏறக்குறைய 300 குழந்தைகளுக்கும் பிரான்சில் 100 குழந்தைகள் வரையிலும் இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்படுகிறது.
இது கண்டறியப்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலோர் அதன்பின் ஓராண்டுக்குமேல் உயிர் வாழ்ந்ததில்லை.
கதிரியக்க சிகிச்சை சில நேரங்களில் இந்தப் புற்றுநோய் பரவும் வேகத்தைக் குறைக்கக்கூடும். இதற்குமுன் இதைக் குணமாக்கும் மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சோதனை சிகிச்சையில், லூகாசிற்கு வழங்கப்பட்ட மருந்து வெற்றிகரமாக மூளைக்கட்டியைக் குணமாக்கியதாகக் கூறப்பட்டது.
இந்த சோதனையில் பங்குபெற்ற மேலும் ஏழு குழந்தைகள் நோய் அடையாளம் காணப்பட்ட பிறகும் சில ஆண்டுகள் உயிர்வாழ்ந்தனர். ஆனால் லூகாசிற்கு மட்டுமே மூளைக்கட்டி முழுவதுமாகக் கரைந்தது. இது மற்ற குழந்தைகளுக்கும் சிகிச்சை வழங்க நம்பிக்கை அளிப்பதாக மருத்துவர்கள் கூறினர்.