இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானபின் நிலவிய அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), இரண்டாவது ஆகப் பெரிய கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) இரண்டும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பிரதமராகப் பதவி வகித்த திரு ஷெபாஸ் ஷரீஃப், 72, கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்.
அவரது அண்ணனும் பிஎம்எல்-என் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷரீஃப் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 13) அவர் பெயரை முன்மொழிந்தார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ ஸர்தாரியின் பிபிபி கட்சி அந்தத் தெரிவை ஆதரித்தபோதும் அரசாங்கத்தில் இணைவது குறித்து உறுதிசெய்யவில்லை. அது வெளியிலிருந்து ஆதரவு வழங்கும் என்று கருதப்படுகிறது.
பொருளியல் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க உதவும் கடினமான முடிவுகளை எடுக்க, நிலையான அரசாங்கம் அமைவது முக்கியம் என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள். கூட்டணி அரசாங்கம் அத்தகைய அரசியல் நிலைத்தன்மையைத் தருமா என்பது கேள்விக்குறியே என்பதை அவர்கள் சுட்டினர்.