ஹனோய்: வியட்நாமின் நிதி மையமாகத் திகழும் ஹோசிமின் நகரம், அண்மைய ஆண்டுகளாக மதுபோதையில் வாகனமோட்டுபவர்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறது.
இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதனால், வியட்னாமில் பறிமுதலாகிய மோட்டார்சைக்கிள்கள் ஹோசிமின் நகரத்தில் குவிந்து கிடக்கின்றன.
அபராதங்கள், வாகனங்களின் மதிப்பைவிட அதிகமாக உள்ளன. எனவே, பலரும் தங்களது வாகனங்களைத் திரும்பப் பெற அபராதம் செலுத்தாமல் அவ்வாகனங்களைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
வியட்னாமில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியைக் குறைகூறுவது அபாயகரமானது என்றாலும் அதிருப்தி அடைந்துள்ள சிலர் பொதுவெளியிலேயே இந்நிலையைப் பற்றி குறைகூறுகின்றனர்.
செயல்திறனற்ற, தேவையில்லாமல் கடுமையாக தண்டிக்கும் ஒரு கட்டமைப்பு, மோட்டார் சைக்கிள்களைப் ‘பிணை’ பிடித்திருப்பதாக ஹோசிமின் நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றும் திரு நுயென் காங், 30, தெரிவித்தார்.