ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகவிருக்கிறார் பிரபோவோ சுபியாந்தோ. இவர், தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் தீவிர ஆதரவாளர்.
இதனால் ஜோக்கோ விடோடோவின் கொள்கைகள் நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலால் பிளவுபட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டிய கடமையை அவர் எதிர்நோக்குகிறார்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்காப்பு அமைச்சருமான பிரபோவோ, 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதே நாளில் மத்திய ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆதரவாளர்களிடையே பேசிய திரு பிரபோவோ, 72, “நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அடக்கமாக இருக்க விரும்புகிறோம்,” என்றார்.
“இந்த வெற்றி அனைத்து இந்தோனீசியர்களின் வெற்றி,” என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து அனைவருக்கும் அதிபர் என்ற முறையில் சேவையாற்றப் போவதாகக் கூறினார்.
திருவாட்டி மேகாவதி சுகர்னோபுத்ரி, டாக்டர் சுசிலோ பம்பாங் யூதயோனோ, தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ உட்பட இதற்கு முன்னாள் இருந்த தலைவர்களுக்கும் பிரபாவோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“ஜோக்கோவியை நன்கு அறிவேன். மிக மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர். சோர்வு என்பதே அவருக்குத் தெரியாது. அவரது அமைச்சர்களும் அவரைப் பின்பற்றி அயராது உழைத்தவர்கள்,” என்று பிரபாவோ மேலும் தெரிவித்தார்.
திரு பிரபோவுடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனும் சோலோ நகரின் மேயருமான திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரானோவோ, முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரு வேட்பாளர்கள்.