மாஸ்கோ: ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி (படம்) பிப்ரவரி 16ஆம் தேதி மரணமடைந்ததாக ரஷ்ய சிறைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்ட 47 வயதான நவல்னி, சுயநினைவு இழந்து கீழே தடுமாறி விழுந்ததாக சிறைத்துறை தெரிவித்தது. அதன்பின்னர் அவரை சோதித்த மருத்துவ ஊழியர்கள் நவல்னி மாண்டதாக அறிவித்தனர்.
ரஷ்ய அதிபர் புட்டின் ஊழல் செய்கிறார் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக விமர்சனம் செய்தவர் நவல்னி. 2020ஆம் ஆண்டு சைபிரியாவில் இருந்த நவல்னி நஞ்சால் தாக்கப்பட்டார். அதன் காரணமாக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். 2021ஆம் ஆண்டு அவர் ரஷ்யா சென்றார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


