வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகளையும் பிற ஆயுதங்களையும் அனுப்பத் தயாராகி வருகிறது.
காஸாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இஸ்ரேலுக்கு அது ஆயுதங்களை அனுப்பத் தயாராகி வருவதாக முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் ஜர்னல் (பிப்ரவரி 16) சனிக்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
எம்கே-82 வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுக்கு துல்லியமாக வழிகாட்டும் கேஎம்யு-572 ஆயுதம், எஃப்எம்யு-139 ரக வெடிகுண்டு திரிகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு அனுப்பப்படவிருக்கும் ஆயுதப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மதிப்பு பல மில்லியன் டாலராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் உத்தேச ஆயுத விநியோகத்தை பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
இதற்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குள் திட்டத்தின் விவரங்கள் மாறக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகளை சுட்டிக்காட்டி அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் விளக்கம் கேட்டதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சு மற்றும் தற்காப்பு அமைச்சு, இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு, அதன் தற்காப்புப் படைகள் பதிலளிக்கவில்லை.
டிசம்பர் 2023 நிலவரப்படி, இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை பற்றிய நாடாளுமன்றத்தின் மதிப்பாய்வை திரு பைடன் நிர்வாகம் இரண்டு முறை புறக்கணித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்காவை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலர் கொல்லப்படுவதற்கும் படுகாயம் அடைவதற்கும் அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தனது வீரர்களை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்கியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிலிருந்து 253 பேர் பிணைப் பிடித்து அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் மூண்டது.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் தொடர்ந்து காஸா வட்டாரத்தைச் சூறையாடி வருகிறது. இதில் 28,775 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.