உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி பிப்ரவரி 16ஆம் தேதியன்று ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுடனான போர் அதன் மூன்றாம் ஆண்டை நெருங்கியுள்ள நிலையில், முக்கிய ராணுவ உதவியைப் பெறவும் இருதரப்பு பாதுகாப்புக் கடப்பாட்டைக் கையெழுத்திட முயற்சி செய்யவும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
உக்ரேனின் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான அவ்திவ்காவை ரஷ்யப் படைகள் நெருங்குகின்றன. அவர்கள் அந்த நகரத்தை அடையாமல் தடுக்க உக்ரேனிய ராணுவ வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பல மாதங்களாக அமெரிக்க ராணுவத்திடமிருந்து வரும் உதவி உக்ரேனுக்கு தாமதமாக வந்தடைகிறது. இதனால், ரஷ்யாவை எதிர்த்து போராட போதுமான ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் இல்லாத நிலை உக்ரேனுக்கு ஏற்பட்டுள்ளது.
உக்ரேனிய ராணுவ தலைமையில் மாற்றங்களை கொண்டு வந்த பிறகு இதுவே அதிபர் ஸெலென்ஸ்கி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.
மாறிவரும் போர்க்கள சவால்களை எதிர்கொள்ள இம்மாற்றம் தேவை என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரேனுடன் ஜெர்மனியும் பிரான்சும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
நேட்டோ கூட்டணியில் சேர உக்ரேன் இலக்கு கொண்டுள்ளது. அதுவரை உக்ரேனுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் அமையும் என்று கூறப்படுகிறது.