கொழும்பு: இலங்கையின் ஆறு பகுதிகளில், இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (ஐஎச்பி) கீழ், இந்தப் பகுதிகளில் ஏறக்குறைய 1,300 வீடுகள் கட்டப்படும் என்று கூறப்பட்டது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா இருவரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) இத்திட்டத்தை மெய்நிகர் முறையில் தொடங்கிவைத்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2017ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை சென்றபோது, ஐஎச்பி திட்டத்தின் நான்காம் கட்டம் குறித்து அறிவித்தார். கடந்த நவம்பரில் இலங்கை சென்ற இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேயுடன் இணைந்து இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
“இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தம் 60,000 வீடுகளைக் கட்டித்தர இந்திய அரசாங்கம் கடப்பாடு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 46,000 வீடுகள் கட்டப்பட்டன,” என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது. திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் குறைந்தது 4,000 வீடுகள் கட்டி முடிக்கப்படவிருப்பதாக அது கூறியது.