கர்ப்பிணி காதலியை நீச்சல் குளத்தில் மூழ்கடிக்க முயன்ற ஆடவருக்குத் தண்டனை இல்லை

2 mins read
b684151c-256b-4544-8c59-15df6c5b73e4
தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தையைப் பெற்றடுக்கப்போவதாகவும் தமது காதலரிடம் அப்பெண் தெரிவித்ததும் அந்த ஆடவர் கோபமடைந்து அவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. - படம்: எக்ஸ் காணொளி

சுபாங் ஜெயா: கர்ப்பமாக இருக்கும் தமது காதலியை நீச்சல் குளத்தில் மூழ்கடிக்க முயன்ற ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது காதலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதில்லை என்று அப்பெண் முடிவெடுத்துள்ளதால் அந்த ஆடவர் தண்டிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்திற்குள் அந்த ஆடவர் சென்றதாகவும் அவரை மூழ்கடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பண்டார் சன்வே பகுதியில் இருக்கும் கூட்டுரிமைக் குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமாட் பிப்ரவரி 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.

அப்பெண் காயமடையவில்லை என்றும் மருத்துவ உதவி தேவையில்லை என்று அவர் கூறிவிட்டதாகவும் திரு வான் அஸ்லான் கூறினார்.

முதலில், அந்த ஆடவருக்கு எதிராக அப்பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால், தமது காதலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதில்லை என்று அவர் பிறகு முடிவெடுத்தார்.

இருவரும் மலேசியர்கள் அல்ல என்றும் இந்த வழக்கு தொடர்பாக இனி விசாரணை நடத்தப்படாது என்றும் சுபாங் ஜெயா காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் பிறகு அவரை நீச்சல் குளத்துக்குள் இழுத்துச் சென்று மூழ்கடிக்க முயன்றதையும் காட்டும் காணொளி பிப்ரவரி 16ஆம் தேதியன்று இணையத்தில் வலம் வந்தது.

அப்பெண்ணை அந்த ஆடவர் பலமுறை குத்தியதாகவும் அந்த கூட்டுரிமைக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தையைப் பெற்றடுக்கப்போவதாகவும் தமது காதலரிடம் தெரிவித்ததும் அவர் கோபமடைந்து தம்மைத் தாக்கினார் என்று அப்பெண் கூறியதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்