பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது சுயநினைவுடன் இருப்பதாகவும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் முக்கியமான தகவல் ஏதும் இருந்தால் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் பிப்ரவரி 19ஆம் தேதியன்று கூறினார்.
டாக்டர் மகாதீரின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகத்தில் வலம் வந்த செய்திகளை அவர் மறுத்தார்.
தொற்று காரணமாக ஜனவரி 26ஆம் தேதியன்று தேசிய இதய மருத்துவமனையில் டாக்டர் மகாதீர் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சில நாள்களுக்கு ஓய்வெடுப்பார் என்று பிப்ரவரி 13ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
98 வயதான டாக்டர் மகாதீர், மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
தமது கட்சிக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை ஒத்திவைக்கும்படி டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர் திரு மியோர் நூர் ஹைடிர் சுஹாய்மி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.