கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆளுநருமான அப்துல் தயீப் மஹ்மூத் காலமானார். அவருக்கு 87 வயது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு திரு தயீப்பின் உயிர் பிரிந்ததாக அவரது மகள் திருவாட்டி ஹனிஃபா ஹஜார் தயீப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
திரு தயீப்பின் நல்லுடல் கோலாலம்பூரில் உள்ள தேசிய பள்ளிவாசலில் கிடத்தி வைக்கப்படும் என்றும் அதன் பிறகு சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திரு தயீப் 1981ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை சரவாக்கின் முதல்வராகப் பதவி வகித்தார்.
அதன் பிறகு 2014ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அவர் சரவாக்கின் ஆளுநராக இருந்தார்.
அண்மையில் அவர் தொடர்பான ஒரு சர்ச்சை எழுந்தது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவரது மனைவி அவரை அங்கிருந்து கடத்திச் சென்றதாக திரு தயீப்பின் பிள்ளைகள் குற்றம் சாட்டினர்.
இதை அவரது மனைவியான திருவாட்டி ரகத் குர்தி தயீப் மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து, திரு தயீப் அவரது வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, திரு தயீப்பிற்கு சரவாக்கின் புதிய சட்டமன்ற வளாகத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று சரவாக்கின் சுற்றுப்பயணத்துறை, கலைகள் அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.