லாஸ் ஏஞ்சலிஸ்: குடும்ப உறுப்பினர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுவனை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 16ஆம் தேதி மாலை, யூட்டா மாநிலத்தில் 32 வயது ஆடவரை அந்தச் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்தை அவசர சேவை அதிகாரிகள் அடைந்தபோது படுகாயம் அடைந்த ஆடவரைக் கண்டனர்.
அவர் தலையில் குண்டடிபட்டிருந்ததாகவும் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.
மாண்ட ஆடவரை இன்னும் அடையாளம் காணவில்லை.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அதையடுத்து, மாண்ட ஆடவரின் குடும்ப உறுப்பினரான 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறுவரின் பெயர் வெளியிடப்படவில்லை.