வாஷிங்டன்: பிள்ளை வளர்ப்பு தொடர்பாக யூடியூப் சேனலில் பிறருக்கு ஆலோசனை வழங்கிவந்த 42 வயது ரூபி ஃபிராங்க், தன் பிள்ளைகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்குச் செல்ல உள்ளார்.
குற்றச்சாட்டுகளை இவர் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புக்கொண்டதை அடுத்து, குறைந்தது நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனையை ஃபிராங்க் எதிர்நோக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஃபிராங்க் தன் 7, 9 வயதுகளுடைய பிள்ளைகளுக்காக 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ‘வதை முகாம்’ போன்ற ஓர் இடத்தை அமைத்து, போதுமான உணவு, நீர், படுக்கை வசதிகள் போன்றவற்றைத் தர மறுத்திருந்தார்.
மேலும், மற்றவர்களிடமிருந்து அந்த இரு சிறுவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடும் வெப்பத்தில் காலணிகளோ காலுறைகளோ தண்ணீரோ இன்றி உடலை வருத்தும் சில வேலைகளையும் ஃபிராங்க் அந்த இரு பிள்ளைகளையும் செய்ய வைத்துள்ளார்.
இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் ஒரு நாள் அந்த 9 வயது மகன் தப்பியோடி, அண்டைவீட்டாரின் உதவியை நாடியபோதுதான் அனைத்தும் வெட்டவெளிச்சமாகின.
ஃபிராங்கின் ‘8 பேசஞ்சர்ஸ்’ எனும் சேனலைக் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பேர் பார்த்து வந்தனர். அந்த சேனல் பின்னர் முடக்கப்பட்டது.