வெளிநாட்டு நாணயங்களை வாங்கி சேமிப்பது, வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகிய காரணங்களால் ஆசிய நிதி நெருக்கடிக்கு பிறகு ஆகக் குறைந்த மதிப்பை எட்டியுள்ளது மலேசிய ரிங்கிட் நாணயம்.
ஆசியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க டாலருடனான நாணய மாற்று மதிப்புக்குக் கீழே இறங்கிய முதல் நாணயம் மலேசிய ரிங்கிட் என்று கூறப்படுகிறது.
ஓர் அமெரிக்க டாலருடனான அதன் மதிப்பு புதன்கிழமை (பிப்ரவரி 21) அன்று 4.801 ரிங்கிட் என்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது 1998ஆம் ஜனவரி மாதத்துக்குப் பின் ஏற்பட்டுள்ள ஆக வலுவற்ற நாணய மாற்று விகிதம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் அமெரிக்க டாலர், மலேசிய ரிங்கிட் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கீழிறங்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விலை நிலைபெற்று, மலேசியாவின் மின்னியல் சாதனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளபோதிலும் முதலீட்டாளர்களுக்கு அந்நாட்டில் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லை என செய்தித் தகவல்கள் கூறுகின்றன.