சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வியாழக்கிழமையிலிருந்து (பிப்ரவரி 22) கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
அதனால், மேற்குப் பகுதியில் உள்ள ராக்லன், பியூஃபோர்ட் நகரங்களிலும் அதையொட்டிய பகுதிகளிலும் வசிக்கும் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள பாலரட் நகருக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலரட் நகருக்கு வடமேற்கில் சுமார் 50 சதுர கிலோமீட்டர் (12,355 ஏக்கர்) பரப்பளவிற்கும் இது போல மேற்கில் உள்ள இன்னொரு பகுதியிலும் கட்டுப்படுத்த முடியாதபடி தீ கொழுந்துவிட்டு எரிவதாகக் கூறப்படுகிறது.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்புப் படையினரும், 24 விமானங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்தார்.
இரவுக்குள் காட்டுத்தீ மேலும் மோசமாகும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.