கோலாலம்பூர்: ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு 26 ஆண்டு காணாத சரிவைத் தொட்டிருப்பது கவலைக்குரியது என்றபோதிலும் அதற்கான சூழ்நிலையை விரிவாக ஆராயவேண்டும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
“முதலீடுகள் அதிகரித்துள்ள அதேவேளை பணவீக்கமும் வேலையில்லா நிலவரமும் குறைந்து உள்ளன. எனவே, அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் வளர்ச்சி நீடிக்கக்கூடியது,” என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
டிஆர்எக்ஸ் எனப்படும் துன் ரசாக் பரிவர்த்தனை நிதி மையத்தின் தொடக்க நிகழ்வின்போது திரு அன்வார் இதனைத் தெரிவித்தார்.
ரிங்கிட்டின் மதிப்பை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அதன் தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை மத்திய வங்கியிடமே விட்டுவிடுவதாகவும் அவர் கூறினார்.
ரிங்கிட்டின் அண்மைய செயல்பாடு வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டது என்றும் மலேசியாவின் பொருளியல் சாதக அம்சங்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) மத்திய வங்கி குறிப்பிட்டு இருந்தது.
“ஏற்றுமதி வளருகிறது; பயணத்துறை மீட்சி காண்கிறது; முதலீடுகள் அதிகரிக்கின்றன; பொருளியல் கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கு அரசாங்கம் கடப்பாடு தெரிவித்து உள்ளது. இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்த பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் இந்த ஆண்டு ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்று முன்னுரைத்து இருந்தனர்,” என்று மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் கூறி இருந்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ள அனைத்துலக நிதி மையமான துன் ரசாக் பரிவர்த்தனை நிலையத்துக்கு மாறிச் செல்லும் நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புத் தொகைகளை திரு அன்வார் அறிவித்துள்ளார்.
தொழிற்சாலைக் கட்டடச் சலுகை, சொத்து மேம்பாட்டாளர்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு வரிச் சலுகை, கடன் மற்றும் சேவைக்கான முத்திரைத் தீர்வை விலக்கு போன்றவை அவரது ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பில் அடங்கும்.
ஏறக்குறைய 28 ஹெக்டர் நிலப்பரப்பில் எழுப்பப்பட்டு உள்ள டிஆர்எக்ஸ் பரிவர்த்தனை நிலையத்தை மலேசியாவின் அனைத்துலக நிதி மற்றும் வர்த்தக மையமாக உருவாக்க இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது.