புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட இளையர்கள் ‘டிக்டாக்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூகத் தளங்களில் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், இளையர்களைச் சமூக ஊடகத்திடமிருந்து விலக்கி வைக்கும் முதல் மாநிலமாகப் புளோரிடா திகழ்கிறது.
புளோரிடாவில் பிப்ரவரி 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, சமூகத் தளத்தின் கட்டமைப்புகள் 16 வயதுக்குட்பட்டவர்கள் அத்தளங்களில் கணக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே சமூகத் தளங்களில் பதிவு செய்யப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும்.
சிறப்பு அம்சங்கள் கொண்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளுக்கும் தளங்களுக்கும் இது பொருந்தும்.
சமூக ஊடகங்கள் இளையர்களுக்கு எதிரான ஒன்றாக தான் கருதுவதாகவும் ஆனால், பெற்றோரின் மேற்பார்வையில் அவர்கள் அதைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு நன்மை பயக்கும் எனத் தான் நம்புவதாகவும் புளோரிடா மாநிலத்தின் ஆளுநர் திரு டிசாண்டிஸ் கூறினார்.
இப்புதிய சட்டத்திற்கு மனித உரிமைக் குழுக்களும் தொழில்நுட்ப வர்த்தக நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக ஊடக அணுகல் இல்லையெனில் இளையர்கள் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் எவ்வாறு தொடர்புகொள்வார்கள் என அவை கேள்வி எழுப்பியுள்ளன.
முக்கியத் தகவல்களைப் பரிபாறிக்கொள்ள முடியாமலும் சமூக அணுகல் இல்லாமலும் இளையர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என அவை கடுமையாக சாடின.