கோலாலம்பூர்: ‘ஜே ஜே’ என்ற திரைப்படத்தில் 100 ரூபாய் நோட்டு ஒன்றில் கதாநாயகி தனது பெயரையும் முகவரியையும் எழுதிய பின்னர் அந்தப் பணத்தாளே தன்னைக் கதாநாயகனுடன் சேர்த்து வைக்கட்டும் என்று விதியிடம் விட்டுவிடுவார்.
அதுபோன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே மலேசியாவில் ஒரு மகளின் அன்பை உணர்த்தும் வகையில் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் ஓர் 50 ரிங்கிட் பணத்தாளைப் பற்றிய பதிவு அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, அந்தப் பணத்தாள் மீண்டும் அதன் உரிமையாளரின் கைக்கு வந்து சேர்ந்தது.
சிறுநீரகப் பிரச்சினையால் 2020ஆம் ஆண்டில் 25 வயது திருவாட்டி நூர் ஹிடாயா முகம்மது என்ற பெண்ணுடைய தந்தை இறந்துவிட்டார்.
அந்தத் தந்தை கடைசியாக மகளுக்குத் தந்த ஓர் 50 ரிங்கிட் பணத்தாள், திருவாட்டி ஹிடாயாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அதில் அவர் மலாய் மொழியில் ‘அப்பா இறுதியாகத் தந்த பணம் இது 11/5/20’ என்று எழுதியிருந்தார்.
ஆனால், தந்தை இறந்து பல மாதங்களுக்குப் பிறகு தன் பணப்பையில் வேறு பணம் இல்லாத காரணத்தால் திருவாட்டி ஹிடாயா அந்தப் பணத்தாளைத் தர வேண்டியதாயிற்று.
நான்கு ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 19ஆம் தேதியன்று, அந்தப் பணத்தாள் திரு அஸ்ஃபருல் ஸாய்னோல் என்பவரது கைக்கு வந்தது.
அதில் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டு நெகிழ்ந்த அவர், தமது ஃபேஸ்புக்கில் படத்தோடு பதிவிட்டு உரிமையாளரைத் தேடுவதாகக் கோரிக்கை விடுத்தார்.
அவருடைய பதிவு 12,000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டது. அதன்வழி திருவாட்டி ஹிடாயா தான் இழந்த பணத்தாளைக் கண்டுகொண்டார்.
திருவாட்டி ஹிடாயாவை திரு அஸ்ஃபருல் பிப்ரவரி 23ஆம் தேதியன்று சந்தித்து அந்தப் பணத்தாளை ஒப்படைத்தார். உதவிய இணையவாசிகளுக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
மறைந்த தந்தையின் ஞாபகமாக மீண்டும் அந்தப் பணம் தன்னிடம் வந்து சேர்ந்ததில் அந்த மகள் பூரித்துப் போனார்.