சிட்னி: ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் அல்லது தொழில் கல்வி பட்டம் முடித்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக அதன் கல்வித் கட்டமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான முன்மொழிவுகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த கிட்டத்தட்ட 8.8 பில்லியன் வெள்ளி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
2050ஆம் ஆண்டிற்குள் ஆஸ்திரேலிய குடிமக்களில் குறைந்தது 80 விழுக்காட்டினராவது இளநிலை பட்டம் முடித்தவர்களாக இருக்க வேண்டும் என்று கேன்பரா திட்டமிடுகிறது. தற்போது ஆஸ்திரேலிய குடிமக்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் இளநிலை பட்டம் முடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.
“எதிர்காலத்தில் வரும் வேலைகளுக்காக மக்களை நாம் தயார்படுத்த வேண்டும். அதற்கான கல்வித் தகுதி, திறன்களை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம்” என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தத்திற்காக 47 முன்மொழிவுகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் பெற்றுள்ளது. அதில் உயர் கல்வி திட்டங்கள், மாணவர் நலன், மாணவர் தங்கும் விடுதி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.