ஜோகூர் பாரு: கடந்த ஆண்டு முழுவதுக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.
ஜோகூர் சுற்றுப்பயணத்துறை இயக்குநர் ஷஹ்ரில் நிஸாம் அப்துல் ரஹிம் ஞாயிற்றுக்கிழமை இத்தகவலை வெளியிட்டார்.
அதன் பொருட்டு, இவ்வாண்டு 20 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க ஜோகூர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் சொன்னார்.
மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறையை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து ஜோகூர் சுற்றுப்பயணத்துறை அணுக்கமாகப் பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுற்றுப்பயணத்துறை திட்டங்கள் குறித்த அனைத்து மேம்பாடுகளும் ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியிடம் தெரியப்படுத்தப்படும் என்றார் அவர்.
ஜோகூரில் மேம்படுத்தப்பட்டுவரும் சுற்றுப்பயணத்துறை நிலையங்களில் ஜோகூர் விலங்கியல் பூங்காவும் தேசிய பூங்காவும் அடங்கும் என்று திரு ஷஹ்ரில் நிஸாம் குறிப்பிட்டார்.