கியவ்: ரஷ்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உக்ரேன் மீது 14 ஆளில்லா வானூர்தித் (டிரோன்) தாக்குதல்களையும் சில ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டது. அவற்றில் 9 ஆளில்லா வானூர்திகளையும் 3 ஏவுகணைகளையும் தனது தற்காப்புத் தாக்குதலின் மூலம் தாக்கி அழித்து விட்டதாக உக்ரேன் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா இரண்டு எஸ்-300 வகை ஏவுகணைகளையும் ஒரு கேஎச்-1பி வகை ஏவுகணையையும் கொண்டு கார்விவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் வட்டாரங்களில் அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேனின் விமானப்படை திங்கள்கிழமை தெரிவித்தது. உக்ரேனால் வீழ்த்தப்பட்ட டிரோன்ஸ் மற்றும் ஏவுகணைகள் குறித்த மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்நிலையில், உக்ரேனில் வரும் மே மாத இறுதிக்குள் புதிதாகத் தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா அதன் படைகளைத் தயார்ப்படுத்தி வருவதாக உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.2.24) தெரிவித்துள்ளார்.
கியவ்வில் செய்தியாளர்களிடமும் பேசிய ஸெலன்ஸ்கி, இந்தத் தருணத்தில் தங்களுடனான மேற்கத்திய நட்புநாடுகளின் ஒற்றுமை இன்றியமையாத ஒன்று. வரும் மாதங்கள் உக்ரேனுக்கு மிகக் கடினமான மாதங்கள் என்றே கூறவேண்டும். ரஷ்யா கோடை காலத்தில் புதிய தாக்குதல் மேற்கொள்ளக்கூடும். அந்தத் தாக்குதலைச் சமாளிக்க உக்ரேன் தயாராகி வருகிறது என்று கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பிப்ரவரி 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யத் தாக்குதலுக்கு 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டு விட்டதாக ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.