சோல்: தென்கொரியாவில் உள்ள கடைத்தொகுதியில் ‘பஞ்சீ’ சாகசத்தில் ஈடுபட்ட மூதாட்டி மாண்டார்.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 26ஆம் தேதியன்று ஜியோங்கி மாநிலத்தில் உள்ள ஸ்டார்ஃபீல்ட் அன்சியோங் கடைத்தொகுதியில் நிகழ்ந்தது.
60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மூதாட்டி பஞ்சீ சாகசத்தில் ஈடுபட்டபோது தரையில் விழுந்ததில் அவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது.
மாண்ட மூதாட்டியின் பெயரையும் சரியான வயதையும் தென்கொரிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
கடைத்தொகுதியில் உள்ள விளையாட்டு நிலையத்தில் அந்த மூதாட்டி 8 மீட்டர் உயரத்திலிருந்து குதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவரைப் பற்றியிருந்த கயிற்றின் இறுக்கம் சற்று தளர்ந்ததால் அவர் தரையில் விழுந்தார்.
இதற்கு இயந்திரக் கோளாறு காரணம் என்று நம்பப்படுகிறது.
காயமுற்ற மூதாட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தென்கொரியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.