டாஷ்கென்ட்: மாசடைந்த இருமல் மருந்து காரணமாக உஸ்பெகிஸ்தானில் 68 சிறுவர்கள் மாண்டனர்.
இதுதொடர்பான வழக்கு கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது.
சம்பந்தப்பட்ட இருமல் மருந்தை இந்தியாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 23 பேருக்கு உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இந்திய நாட்டவர்.
குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கும் இரண்டு ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வரி ஏய்ப்பு, தரமற்ற அல்லது போலி மருந்தை விற்பனை செய்தது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது, கவனமின்மை, போலி ஆவணங்களைத் தயாரித்தல், லஞ்சம் கொடுத்தல் ஆகிய குற்றங்களை அவர்கள் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்துகளை உஸ்பெகிஸ்தானில் விற்பனை செய்த குராமேக்ஸ் மெடிக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகவேந்திரா பிரதார் சிங்கிற்கு ஆக அதிகமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மாண்ட சிறுவர்களின் குடும்பங்களுக்குத் தலா $80,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருமல் மருந்தை உட்கொண்டு உடற்குறை ஏற்பட்ட நான்கு சிறுவர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்தால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுச் சிறுவர்களின் பெற்றோருக்கு $16,000லிருந்து $40,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.