கொழும்பு: இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் மூன்று நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எலி நடமாட்டமே காரணம் என்று அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
பிப்ரவரி 22ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ330 விமானத்தில் எலி நடமாடியது தெரியவந்தது.
விமானத்தின் முக்கியப் பாகங்களை அது கடித்து விடாமல் இருப்பதை உறுதிசெய்ய விமானம் முழுவதும் எலி தேடும் பணி நடைபெற்றது.
இப்போது விமானச் சேவை தொடர்வதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறினாலும், விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஒட்டுமொத்த விமானப் புறப்பாடு அட்டவணைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, “அந்த விமானம் மூன்று நாள்களுக்கு கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் எலி கண்டறியப்படும் வரை அந்த விமானத்தை இயக்க இயலாது. அந்த எலி இறந்து காணப்பட்டது,” என்றார்.