ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு அண்மையில் நடைபெற்றது.
இதில் திரு சுபியாந்தோ பிரபோவோ கிட்டத்தட்ட 60 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரு பிரபோவோவுக்கு ஆக உயரிய ராணுவ கௌரவத்தை இந்தோனீசியாவின் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ வழங்கியுள்ளார்.
திரு சுபியாந்தோ தற்போது இந்தோனீசியாவின் தற்காப்பு அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
இவர் இந்தோனீசியாவின் சிறப்பு ராணுவப் படையின் முன்னாள் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
“நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் திரு சுபியாந்தோ தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்தக் கௌரவம் வழங்கப்படுகிறது. ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.