புதுடெல்லி: உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடுத்தது.
இன்றும் இரு நாடுகளுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நிலவி வருகிறது.
போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போரைத் தொடர ரஷ்யாவுக்குக் கூடுதல் வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
எனவே, உக்ரேனுக்கு எதிராகப் போரிட ஆள்சேர்க்கும் பணியில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வரிசையில், தனது சார்பாக உக்ரேனை எதிர்த்துப் போரிட இந்திய நாட்டவர்களையும் அது சேர்த்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், வேலையில்லாப் பட்டதாரிகள் போன்ற பலதரப்பட்ட இந்தியர்களை ஆள்சேர்ப்பு முகவர்களின் உதவி யுடன் ரஷ்யா அதன் ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆள்சேர்ப்பு மையத்தில் இந்திய (மொழிகள்) மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் இது குறித்து புதுடெல்லியில் உள்ள ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமது மேற்பார்வையின்கீழ் 70க்கும் 100க்கும் இடைப்பட்ட இந்திய நாட்டவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, இந்திய நாட்டவர்களைவிட நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றார் அவர்.
போர்க்களத்தில் சண்டை போட தேவைப்படாத மற்ற பணிகளைத் தருவதாகத் தங்களிடம் முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும் பிறகு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ரஷ்யா சார்பாகப் போரிட உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சில இந்தியர்கள் தெரிவித்தனர்.

