சிட்னி: முன்னாள் ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஒருவர் நாட்டின் ரகசியங்களை இன்னொரு நாட்டிடம் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய உளவுத்துறை தலைமை இயக்குநர் மார்க் பர்கஸ் தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குத் துரோகம் இழைத்த அந்த முன்னாள் அரசியல்வாதியின் பெயரை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கோபக் குரல்கள் பிப்ரவரி 29ஆம் தேதி எழுந்தன.
இன்னொரு நாட்டைச் சேர்ந்த உளவாளி அந்த முன்னாள் அரசியல்வாதியைத் தமது பக்கம் இழுத்துத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக திரு பர்கஸ் கூறினார்.
அந்த உளவாளி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரத்தை திரு பர்கஸ் வெளியிடவில்லை.
“சம்பந்தப்பட்ட வெளிநாட்டின் அரசாங்கத்தின் நலன்களை மேம்படுத்த அந்த முன்னாள் அரசியல்வாதி தமது நாடு, கட்சி, முன்னாள் சக அரசியல்வாதிகளுக்குத் துரோகம் இழைத்தார்,” என்று பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் திரு பர்கஸ் தெரிவித்தார்.