ஷா அலாம்: மலேசியாவில் கூட்டுரிமைக் குடியிருப்பின் 23வது மாடியிலிருந்து தாய்லாந்துப் பெண் ஒருவர் தள்ளிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரத்திலிருந்து விழுந்ததில் அப்பெண் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி இரவு, சிலாங்கூர் மாநிலத்தின் ஷா அலாம் நகரில் நிகழ்ந்தது.
அந்தப் பெண்ணை அவரது காதலர் மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த 32 வயது பெண் மாடியிலிருந்து விழுவதற்கு முன்பு அவரும் அவரது காதலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர் என்று ஷா அலாம் காவல்துறை தெரிவித்தது.
அந்தப் பெண்ணின் 37 வயது காதலர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் காவல்துறை உதவி ஆணையர் முகம்மது இக்பால் இப்ராகிம் கூறினார்.
லாரி ஓட்டுநரான அந்த ஆடவர், இதற்கு முன்பு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்றும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் கஞ்சா புகைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் காவல்துறை கூறியது.