சோல்: தென்கொரியாவில் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியாவெங்கும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனைகளில் பல முக்கிய சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் மருத்துவ நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது.
பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களது மருத்துவ உரிமங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை.
பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி, வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 9,000க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களில் 294 பேர் மட்டுமே வேலைக்குத் திரும்பியுள்ளதாக தென்கொரிய சுகாதாரத் துணை அமைச்சர் பார்க் மின் சூ தெரிவித்துள்ளார்.
பயிற்சி மருத்துவர்கள் சிலர் நோயாளிகளின் நலன் கருதி வேலைக்குத் திரும்பியிருப்பதை அவர் வரவேற்றார். இது புத்திசாலித்தனமான முடிவு என்றார் அவர்.
மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முன்பு தற்போதைய மருத்துவர்களின் சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றை அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ள இளம் மருத்துவர்கள் கூறுகின்றனர்.