ஜோகூர் பாரு: மலேசியாவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக அந்நாட்டுச் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) கூறியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக அத்துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் லோக்மான் ஜமான் தெரிவித்தார்.
மேலும், இந்தப் போக்கு கவலைக்குரிய ஒன்று எனப் பிப்ரவரி 28ஆம் தேதி சீனப் புத்தாண்டு மற்றும் விடுமுறை காலத்தையொட்டி ஜோகூரில் இருக்கும் ஸ்கூடாய் சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட திரு லோக்மான் ஜமான் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 768,276 பேரிடம் சோதனை செய்ததாகவும் அவர்களில் 165,553 பேருக்குப் பல்வேறு போக்குவரத்துத் தொடர்பான குற்றங்கள் புரிந்ததற்காக அழைப்பாணை வழங்கியதாகவும் திரு லோக்மான் குறிப்பிட்டார்.
அழைப்பாணை வழங்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 26 விழுக்காட்டினர் (42,505 பேர்) உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் என அவர் எடுத்துரைத்தார்.