கோலாலம்பூர்: அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கார் ஒன்று தரைத்தளத்தில் விழுந்ததை அடுத்து, அதில் இருந்த பெண் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பி. ராம்லியில் மார்ச் 1ஆம் தேதி பிற்பகல் 1.05 மணி அளவில் நிகழ்ந்ததாக அந்நகரத்தின் தீயணைப்பு மீட்புப் படை தெரிவித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள், ஓர் அவசர மருத்துவ மீட்புச் சேவை வாகனம் ஆகியவற்றுடன் 15 அதிகாரிகளும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்துக்கு அருகில் இருந்த தரைத்தளத்தில் அந்த கார் கவிழ்ந்துகிடந்ததைக் கண்டனர். அதன் மேல் பகுதி சேதமடைந்திருந்தது.
காரில் இருந்த பெண்ணுக்குத் தலையிலும் முழங்கால்களிலிலும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.