ஜோகூர் பாரு: போக்குவரத்துக்கு எதிராக கார் ஒன்று செல்வதைக் காட்டும் 13 வினாடி காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதை அடுத்து, அது தொடர்பான விசாரணையில் உதவ, மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 75 வயது மூதாட்டி மார்ச் 1ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அடிப்படையில் மூதாட்டிக்கு முதுமைக்கால மறதிநோய் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபணமானால் ஐந்தாண்டுகளுக்கு மிகாத சிறைத் தண்டனையும் 15,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து எதுவும் ஊகிக்க வேண்டாம் என்றும் இதைக் காவல்துறையினரிடம் விட்டுவிடுவதே நல்லது என்றும் காவல்துறை கூறிற்று.
அவசர விளக்குகள் எரிந்த வண்ணம் சாம்பல் நிற கார் ஒன்று, போக்குவரத்துக்கு எதிராக ஓட்டப்படும் காட்சியைக் கொண்ட காணொளி, இணையவாசிகள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வந்தது.